உள்நாட்டு விமானப் பயணிகள் கவனத்துக்கு; கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி: இன்று முதல் அமல் 

சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் உள்ளிட்ட 6 வெளிமாநிலங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானப் பயணிகள் கண்டிப்பாக கரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகளுக்கு மட்டுமே இதுவரை கரோனா மருத்துவப் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கேட்கப்படவில்லை. ஆனால், தற்போது பரவும் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இன்றிலிருந்து சென்னை உள்நாட்டு விமானப் பயணிகளுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து அந்தமான், ஒடிசா தலைநகர் புவனேஸ்வர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், மணிப்பூர் தலைநகர் இம்பால், மேற்கு வங்கத்தின் பேக்டோக்ரா, குஜராத்தின் ராஜ்கோட் ஆகிய 6 உள்நாட்டு விமானங்களில் செல்பவர்களுக்குக் கரோனா தொற்று இல்லை என்கிற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு முனையத்திற்கு வரும் பயணி, விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் ஐசிஎம்ஆர் (ICMR) அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்கிற சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டு வரும் பயணிகள் மட்டுமே மேற்கண்ட 6 உள்நாட்டு விமானங்களில் பயணிக்க முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

தொற்று இல்லை என்கிற சான்றிதழ் கொடுத்தால்தான், விமான நிலைய கவுண்டர்களில் பயணிக்கு போர்டிங் பாஸ் கொடுக்கப்படும். சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளின் பயணம் ரத்து செய்யப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவார்கள். அந்தப் பயணிகள் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்கிற சான்றிதழுடன் வந்தால் மீண்டும் விமானப் பயணம் செய்யலாம். தனி விமானங்களில் இந்த நகரங்களுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Cordelia Full ship tour video Link

Need Help? Chat with us